ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கார்; சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் தனியார் நிறுவன கார் ஷோரூம் உள்ளது. அங்கு புதிய கார் வாங்கச் சென்ற வாடிக்கையாளருக்கு, ஷோரூம் ஊழியர் காரில் ஏறி டெமோ காட்டியுள்ளார்.
அப்போது திடீரென கார் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. தொடர்ந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு, 20 அடி தூரம் சென்று சாலையை கடந்து எதிர்புறத்தில் நின்றது.
இந்த விபத்தின் போது சாலையில் கனரக வாகனங்கள் ஏதும் வராததால் காருக்குள் இருந்த ஷோரூம் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், உடைந்த மின் கம்பம் உயர் மின்னழுத்தம் கொண்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கார் தாறுமாறாக செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.