சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி புதுடில்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் துயரம்

இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பஸ் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம். பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் நடந்த துயரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ஒவைசி வலியுறுத்தல்

இந்த விபத்தில் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி அளித்த பேட்டி: தீப்பிடித்தபோது பஸ்சில் யாத்ரீகர்கள் 42 பேர் இருந்துள்ளனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மாத்தன் ஜார்ஜுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். விபத்து குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உடல்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவதையும், காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ வசதி வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு

இந்த விபத்து குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியாவின் மதீனா அருகே ஒரு துயரமான பஸ் விபத்தைக் கருத்தில் கொண்டு, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 8002440003 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெய்சங்கர் இரங்கல்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ச ங்கர் வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியாவின் மதீனாவில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சவுதி அரேபியா அரசுடன் முழு தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.