திருச்சி ஹைவேயில் சம்பவம்... ம.பி.யில் மடக்கிய தனிப்படை... ரூ.10 கோடி மதிப்பு தங்கக்கட்டி மீட்பு!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை மேலாளரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் மேலாளராக பணி புரிந்து வருபவர் குணவத் (26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்வதற்காக கடந்த மாதம் 13-ந் தேதி காரில் தங்கக் கட்டிகளுடன் சென்றார். அந்த காரில் அவருடன் டிரைவர் மற்றும் கடை ஊழியர் ஒருவர் இருந்தனர்.
திண்டுக்கல் நகைக்கடையில் குறிப்பிட்ட அளவு தங்கக் கட்டிகளை கொடுத்து விட்டு மீதமிருந்த சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி குணவத் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே வந்த போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்தி 3 பேரும் கீழே இறங்கினர்.
அப்போது அந்த காரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், நகைக்கடை ஊழியர் குணவத் உள்ளிட்ட மூன்று பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, காரில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து விட்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து குணவத் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் ஆந்திரா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் முகாமிட்டு இந்த கொள்ளை சம்பவம் குறித்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் மத்தியப் பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த தேவாசி (22), விக்ரம் ஜாட் (19) என்பது தெரிய வந்தது.
மேலும் இருவரும் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் மத்தியப் பிரதேசத்தின் பர்வானிக்கு செல்லும் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அவர்களுக்கு தெரியாமல் அந்த பேருந்தில் ஏறி 2 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்கக் கட்டி, ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கைதான தேவாசி மற்றும் விக்ரம் ஜாட் ஆகியோரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விரைவில் திருச்சி அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.