திருச்சியில் ரூ.10 கோடி தங்கம் கொள்ளையடித்த 12 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது; 9 கிலோ நகை, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்!

திருச்சியில் ரூ.10 கோடி தங்கம் கொள்ளையடித்த 12 பேரை மத்தியப் பிரதேசத்தில் தமிழக போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம், 9 கிலோ தங்க நகைகள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சவுகார்பேட்டையில் 'ஆர்.கே.சில்வர்' என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் மேலாளர் குணவந்த் என்பவர் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய சென்றார். இவருடன் காரில் ஊழியர் மகேஷ் ராவல் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரதீப்ஜாத் ஆகியோர் பயணித்தனர்.
கோவை, மதுரை, திண்டுக்கல்லில் நகைகளை விற்ற பிறகு 10 கிலோ தங்க நகைகளோடு காரில் மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருங்களூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே சரியாக இரவு 8.20 மணியளவில் வந்தபோது மூவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து கருப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குணவந்த் உட்பட மூவரின் கண்களிலும் மிளகாய் பொடியை துாவி விட்டு 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து குணவந்த் கொடுத்த புகாரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைத்து டோல்கேட்டுகள் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சமயபுரம் டோல்கேட்டில் ஆய்வு செய்தபோது தங்கத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் பயன்படுத்தியது கருப்பு நிற கார் என்பதும், அந்த கார் போலி பதிவு எண் கொண்டது என்பதும் தெரிந்தது. காரின் உண்மையான பதிவு எண் குறித்து ஆராய்ந்ததில் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து திருச்சி எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் லால்குடி டி.எஸ்.பி.தினேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநில காவல் துறையினர்களுக்கும் தகவல் தெரிவித்து வெளிமாநிலங்களில் தமிழக காவல்துறையினர் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணையில் குணவந்த்தின் கார் ஓட்டுநர் பிரதீப்ஜாத்துக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பிரதீப் ஜாத்தை விசாரணை செய்ததில் அவருடன் மனோகர் ராம் என்பவரும் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து 250 தொலைபேசி எண்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளை ஆய்வு செய்து கடந்த மாதம் இறுதியில் கர்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியில் கர்நாடகா காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரை கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களின் ஆய்வுகளின்படி மத்தியப் பிரதேசம் சென்ற போலீசார் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் பர்வானிக்கு சென்ற பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான ஜோத் மங்கிலால், விக்ரம் ஜாட் ஆகியோர் இருப்பது கண்டுபிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் மீதமுள்ள குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினர். அதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பன்னாராம் தேவாசி என்கிற வினோத், சொகைல்கான் என்கிற முகமது சொகைல், கைலாஷ், ஹனுமான் ஜாட், மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவி ஆகியோர் கடந்த 5 ஆம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம், சுமார் 9.432 கிலோ தங்க நகைகள், நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 7 ஸ்மார்ட் போன், 1 பட்டன் போன், 40 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தமிழக போலீசாரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிற மாநில போலீஸாரின் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரையும் துரிதமாக செயல்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட டி.எஸ்.பிக்கள் தினேஷ்குமார், ராஜமோகன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் ஆளிநர்கள், சைபர் குற்றப்பிரிவு காவலர்கள், பிற மாநில காவலர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் வெகுவாக பாராட்டியுள்ளார்.