மூளையை தின்னும் அமீபா நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் - சபரிமலை பக்தர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

மூளையை தின்னும் அமீபா நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் - சபரிமலை பக்தர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூளையைத் தின்னும் அமீபா என்பது நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) எனப்படும் ஒரு வகை நுண்ணுயிரியாகும். இவை, ஆறுகள், நீரோடைகள், குளங்கள் மூலம் பரவுகின்றன. நீரை குடிப்பதன் மூலமாகவும், அதில் குளிப்பதன் மூலமாகவும் மூக்கு வழியாக நீர் உள்ளே செல்லும்போது தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மூளை காய்ச்சல் பாதிப்பால் கேரளாவில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்று போல மூளையை தின்னும் அமீபா நோய் பரவாது. எனவே, சபரிமலைக்குச் செல்பவர்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகள் அளித்துள்ளனர்.

அதில், “சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களாக இருந்தால், அதற்கான மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரைக்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும்போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும்.

கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தமாக கழுவுங்கள். கழிவுநீர் சரியான முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்யுங்கள். சபரிமலைக்கு வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும்போது மூக்கினுள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கரோனா தொற்று போல அமீபா தொற்று நோய் பரவாது. எனவே, சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் செல்லலாம்.

மேலும், சபரிமலைக்கு சென்று திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி, வாந்தி, மயக்கம், சுவை மாற்றம், பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும்” என அறிவுறுத்தி உள்ளனர்.