‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தில் 3 கதைகள்: இயக்குநர் கே.பி.ஜெகன் தகவல்
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார்.
‘பிக் பாஸ்,’ விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி சங்கர் மற்றும் பலர்ம் நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தைத் தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ், எஸ்.கே. செல்வகுமார் தயாரித்துள்ளார்.
படம் பற்றி கே. பி. ஜெகன் கூறியதாவது: மூன்று கதைகள் ஒரு நேர்கோட்டில் பயணிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்துக்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும். பெரும்பாலான படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்” என்றார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சேரன், விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.