ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

இந்தியாவுடனான 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 248 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய அந்த அணியின் வீரர்கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்தில் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வல் 175, கேப்டன் ஷுப்மன் கில் 129 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தை ஷாய் ஹோப் 31 ரன்களுடனும், டெவின் இம்லாக் 14 ரன்களுடனும் தொடர்ந்தனர். ஆனால், குல்தீப் சிங், சிராஜ், பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்குச் சுருண்டது. ஷாய் ஹோப் 36, டெவின் இம்லாக் 21, ஜஸ்டின் கிரீவ்ஸ் 17, கேரி பியரி 23, வாரிக்கன் 1, ஆன்டர்சன் பிலிப்க் 24, ஜெய்டன் சீல்ஸ் 13 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 82 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஃபாலோ-ஆன் பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்ஸின்போது டேஜ்நரைன் சந்தர்பால் 10 ரன்களில், சிராஜ் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அலிக் அத்தனாஸ் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டானார். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜான் கேம்ப்பெல்லும், ஷாய் ஹோப்பும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதத்தைக் கடந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர்.
3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் கேம்ப்பெல் 87 ரன்களும், ஷாய் ஹோப் 66 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அந்த அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 97 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து விளையாட உள்ளது.