மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிச் சென்று பிடித்தார் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நேற்று முன்தினம் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்ததில் ஸ்ரேயஸ் ஐயருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அந்தக் காயத்தை சரி செய்வதற்கான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் நேற்று தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர், வேகமாக உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.