இந்தாண்டு உக்கிரமா வரேன்.. நாள் குறிச்ச வடகிழக்கு பருவமழை! வெள்ள எச்சரிக்கையுடன் வந்த வானிலை தகவல்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் துவங்க வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '' தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு பகுதிகளில் தற்போது வீசும் மேற்கு திசை காற்று வடகிழக்கு திசை காற்றாக வீசும் போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை துவங்கும்'' என்றார்.
மேலும் அதுகுறித்து விளக்கமாக விவரித்த அவர், '' அக்.16 ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் மாதத்தில் தான் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. அனேக வருடங்களில் இயல்பை விட அதிகமாக தான் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இயல்பை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்த அவர், இந்தாண்டு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்புள்ளது என கூறினார்.
மேலும், ''இந்தாண்டு தென்கோடி மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்புள்ளது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 44 சதவீதம் மழை பதிவாகும். இந்தாண்டு 50 சதவீதம் வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது என்ற அவர், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி வருவதால் அதற்கு முன்னர் ஐந்து நாட்கள் தரவின் அடிப்படையில் தான் கூற முடியும்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், '' கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பாக பதிவாகும். கடந்த 25 ஆண்டு கணிப்பில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் தான் அதிகமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல் சின்னங்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பாக 33 சதவீதம் பதிவாகும். இந்த ஆண்டும் அதே அளவில் இயல்பாக தான் பதிவாகியுள்ளது. திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணங்களால் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள பாதிக்கும் ஏற்படும் சூழல் உருவாகவும் வாய்ப்புள்ளது.'' என தெரிவித்தார்.