நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நாளை தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஒரு இடைவேளையும், பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டமும் நடைபெறவுள்ளது.

"நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதற் கட்டம் பிப்ரவரி 13 அன்று நிறைவடைகிறது. பின்னர் மார்ச் 9 ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மட்டுமல்லாமல், பல முக்கியமான விவாதங்கள் நடைபெறும்" என்று மக்களவை செயலகம் முன்னதாக வெளியிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மொத்தம் 30 அமர்வுகள் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இது பிரதமர் நரேந்திர மோடி 3.0 அரசாங்கத்தின் மூன்றாவது முழுமையான பட்ஜெட் ஆகும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்காக பிப்ரவரி 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களை மக்களவை தற்காலிகமாக ஒதுக்கியுள்ளது. மேலும் ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மக்களவையில் கேள்வி நேரம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குடியரசுத் தலைவர் மக்களவைக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது காலை 10.45 மணிக்குள் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது போது உறுப்பினர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரைக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் புறப்படுவார். குடியரசுத் தலைவர் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று மாநிலங்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.