கனமழையால் 137 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு நீர்மட்டம்: 3 மதகுகளில் தண்ணீர் திறப்பு

கனமழையால் 137 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு நீர்மட்டம்: 3 மதகுகளில் தண்ணீர் திறப்பு

 கனமழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137.8 அடியை எட்டியுள்ளது. அணையில் 3 மதகுகளில் இருந்து வெள்ளநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கேரளாவில், இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில் இடைவிடாது மழை பெய்கிறது. அதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நெடுங்கண்டம் பகுதியில் ஒரு பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளும் நீரில் மூழ்கி உள்ளன. நெடுங்கண்டம்-கூட்டார் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

கல்லார்குட்டி அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், அதன் 4 மதகுகளையும் அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். விநாடிக்கு 160 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இன்று ( அக்.18) காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.80 அடியை எட்டியுள்ளது. அணையில் 3 மதகுகளும் திறக்கப்பட்டு 5000 கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் நீர் திறப்பு அளவு உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குமுளியில் பலத்த மழை பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கனமழையால் வீடுகளை விட்டு வெளியே நகர முடியாமல் தவித்த 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

42 குடும்பங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.வண்டி பெரியாறில் உள்ள காக்கிகவலா பகுதியில் உள்ள வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. அங்கு வசிப்போர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.