கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் - செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூரில் சிஐஐ, யங் இன்டியன்ஸின் சார்பில் நடைபெற்ற மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (நவ.9ம் தேதி) நடைபெற்றது. பங்கேற்பாளர்களை சிஐஐ தலைவர் பிரபு வரவேற்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சிறப்புரையில், "கரூரின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டில் ரூ.50,000 கோடியாக உயர்த்த வேண்டும். நம் முன்னோர்கள் கட்டி அமைத்து கொடுத்த கரூரை நாம் மேலும் மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, கொடியசைத்து மாரத்தான், வாக்கத்தானை தொடங்கி வைத்து வாக்கத்தானில் பங்கேற்றனர். இந்நிகழ்வில், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ், சிஐஐ துணை தலைவர் பெருமாள், யங் இன்டியன்ஸ் யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏடிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்டோர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பெரியவர்களுக்கான மாரத்தான் போட்டி 10 கி.மீட்டர், 5 கி.மீட்டர் பிரிவிலும், சிறுவர்களுக்கான (8 வயது முதல் 14 வயதிற்குள்) மாரத்தான் போட்டி 5 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது. இதேபோல், பெரியவர்களுக்கான வாக்கத்தான் போட்டி 3 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.