பழைய ஓய்வூதிய திட்டம்... வேலைநிறுத்தத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ!

பழைய ஓய்வூதிய திட்டம்... வேலைநிறுத்தத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அக்டோபர் 16ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடத்த உள்ளதாக ஜாக்டா ஜியோ அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ், சண்முக நாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தியது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எங்களை சந்தித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதனை நம்பி நாங்கள் அனைவரும் ஆதரவு அளித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகாகவும் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு வழங்கிய கோரிக்கையை மறக்கவில்லை. நிதிநிலை சரியான உடன் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியும் அளித்தார். ஆனாலும் கடந்த நாலரை ஆண்டாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சரண் விடுப்பு தொகை மட்டும் வழங்குவதாக அரசு அறிவித்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைப்பதாக தெரிவித்தார். அந்த குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்து கால அவகாசம் வழங்கி இருப்பது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்தந்த வட்டார தலைமை அலுவலகம் முன்பாக கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் முன் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து நவம்பர் 18 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதற்குப் பின்னரும் அரசு எங்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்தனர்.