குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: நடிகர் கமால் ஆர் கான் கைது
குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பாலிவுட் நடிகர் கமால் ஆர் கானை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவராவில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த 18-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2வது மாடியில் உள்ள எழுத்தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்பவரது வீட்டிலும் 4-வது மாடியில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்டிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். இதைச் சுட்டது யார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதை செய்தது நடிகர் கமால் ஆர் கான் என்பது தெரியவந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரை போலீஸார் நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். “உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும், யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கமால் ஆர் கான் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் கமால் ஆர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.