கலசப்பாடி காட்டாற்றில் வெள்ளம்: 3-வது நாளாக சாலை துண்டிப்பால் 9 கிராம மக்கள் அவதி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சித்தேரி ஊராட்சி கலசப்பாடி காட்டாற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப் பகுதியில் உள்ள 9 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வளவு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, அக்கரை காடு, நைனா வளவு, கிணத்து வளவு ஆகிய 9 கிராமங்கள் அமைந்துள்ளன.
சுமார் 3,500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் தங்களது மருத்துவம், கல்வி, அத்தி யாவசிய தேவைகளுக்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுவழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு ரூ.12.70 கோடி மதிப்பில் தார் சாலை மற்றும் நலங்குபாறை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.