படிப்பில் கவனக்குறைவு; 10 வயது மகனுக்கு சூடு வைத்த தந்தை
படிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்ததாகக் கூறி 10 வயது மகனை சூடு வைத்த தந்தையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பெரும்பாடியில் உள்ள கொல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பூவரசன். இவரது மனைவி ஐமாவதி. இந்த தம்பதிக்கு 10 வயதில் தங்ககுருநாதன் என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐமாவதி தற்போது தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் பூவரசன் தனது மகனுடன் பெரும்பாடி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
சிறுவன் தங்ககுருநாதன், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். பூவரசன் தனது மகனை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் படிக்காமல் விளையாடி விட்டு சிறுவன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைக் கண்ட பூவரசன் சிறுவனை எழுப்ப முயன்றுள்ளார். சிறுவன் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பூவரசன், வீட்டில் இருந்த சிறிய கத்தியை சூடு படுத்தி, சிறுவனின் இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சூடு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், குடியாத்தம் தாலுகா போலீசார் பூவரசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் கூறுகையில், “பெரும்பாடி பகுதியில் தந்தை ஒருவர் தனது 10 வயது மகனை கத்தியால் சூடு வைத்ததாக தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். காயமடைந்த சிறுவன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தந்தை பூவரசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை மீதான வன்முறை தொடர்பாக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.