வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை
திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான டிசம்பர் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் வரை, அதாவது ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
முதல் 3 நாட்கள், அதாவது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர், ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் டோக்கன்கள் இல்லாமல் கூட தரிசனம் செய்யலாம்.
மேலும் இந்த நாட்களில் தினமும் 15000 ரூ.300 சிறப்பு தரிசனமும், 1000 வாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் பெற்றவர்களுக்குக்கான தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த 10 நாட்களும் விஐபி தரிசனம், முதியோர், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
டிசம்பர் 10-ம் தேதி ஆன்லைன் மூலம் உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும். டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். அதே நாள் மதியம் 3 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படும். இதனை பெற்றுக்கொண்ட பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு பிஆர் நாயுடு கூறினார்.