சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நிறுத்தம்! மேயர் பிரியா கூறுவது என்ன?

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நிறுத்தம்! மேயர் பிரியா கூறுவது என்ன?

 மழை நீர் வடிகால் பணிகளும், சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா இன்று (அக்.16) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, ''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் பிடிப்பதற்காக கூடுதலாக 5 வாகனங்கள், குப்பை அள்ளுவதற்கு 21 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே நாய் பிடிக்கும் 23 வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இப்பொழுது கூடுதலாக 5 வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த பணிகள் 60% பணிகள் முடிந்துள்ளன. அதே போல நாய்களுக்கு சிப் பொருத்தக் கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.

மண்டலத்துக்கு ஒரு நாய்கள் கருத்தடை மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் டிசம்பர் மாதம் முடியும். கருத்தடை செய்வதனால் தெரு நாய்களின் தொல்லை குறையும். பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு அளிப்பதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகின்றன. பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.'' என கூறினார்.

பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளா? என்ற கேள்விக்கு, ''2022 ஆம் ஆண்டு முதல் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் பணிகள் முடிந்துள்ளன. தற்போது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி, ஜனவரிக்கு பிறகு மேற்கோள்ள அறிவுறுத்தி உள்ளோம். சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன'' என தெரிவித்தார்.

5 மற்றும் 6 மண்டலங்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் முழுவதும் பணியமர்த்தப்பட்டார்களா? என்ற கேள்விக்கு, ''ஏற்கெனவே நிறைய பேர் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு சேர விரும்புபவர்களுக்கு உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. போதுமான அளவிற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. எவ்வளவு பணியாளர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம்'' என கூறினார்.

மழை கால கட்டுபாட்டு மையத்தில் பெறப்படும் புகார்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு, '' கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு, பெறப்படும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.'' என்றார்.