கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வேலைநிறுத்தம் - சிக்கன் விலை உயரும் அபாயம்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வேலைநிறுத்தம் - சிக்கன் விலை உயரும் அபாயம்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்றும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கோழிக்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சி உண்பது அதிகளவில் மக்களிடையே பழக்கம் இல்லாத நிலையில், பண்ணை கறிக் கோழிகள் வரத் துவங்கிய பின்னர், சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.‌ விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாக கோழி இறைச்சி உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்ள ஏராளமான விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைத்து கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடம் இருந்து கோழிக் குஞ்சுகளைப் பெற்று, 42 நாட்களுக்கு வளர்த்து கொடுக்கும் பணி செய்து வருகின்றனர்.

இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு கூலியாக வழங்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு 3 ரூபாய் 50 காசு என கூலி இருந்த போது கோழி பண்ணைக்கு தேவையான தேங்காய் மஞ்சு 2000 ரூபாய்க்கு இருந்தது. அது தற்போது 24 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல் மின் கட்டணம் உயர்வு, கோழிக் குஞ்சுகள் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க தேவையான அடுப்புக்கரி மூட்டைகள், ஆட்கூலி என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 6 ரூபாய் 50 காசு என கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கூலி உயர்த்தப்படாமல் உள்ளதால் பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய், காடை ஒன்றுக்கு 7 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் நேற்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் கோழி பண்ணைகள் செயல்பட்டு வரும் நிலையில், 10 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கோழிப் பண்ணைகள் உற்பத்தி நிறுத்தம் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தட்டுப்பாடு நிலவும்பட்சத்தில் உடனடியாக விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மக்களின் சத்தான, இன்றியமையாத, அசைவ உணவை தங்கு தடையின்றி வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கூலி நிர்ணயத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் பண்ணை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.