தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறைக்கு உலக அளவில் புகழ்! அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!

தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறைக்கு உலக அளவில் புகழ்! அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!

உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களே தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறையை பற்றி புகழ்ந்து பேசுகின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ''என் பள்ளி, என் பெருமை'' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி. இந்த நாளை பள்ளிகளுக்கு சென்று கொண்டாடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளி கல்வித்துறைக்கு 70க்கும் அதிகமான திட்டங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாட்டு ஆசிரியர்களைப் போல உலகில் எவரும் இல்லை'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி விளம்பரப்படுத்துவதற்காக நடத்தியது அல்ல, உங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்? என்பதை தற்போது உள்ள மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக தான். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பகுத்தறிந்து பார்க்கக் கூடியவர்கள்'' என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ''பள்ளிக் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பல்வேறு நாடுகள் பின்பற்றுகின்றன. மற்ற நாடுகளில் இருக்கக் கூடியவர்கள் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித் துறையை திரும்பிப் பார்க்கிறார்கள்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசே தமிழ்நாட்டின் கல்வி துறையை பாராட்டுகிறது. உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களே தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறையை பற்றி புகழ்ந்து பேசுகின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றுகிறார். இது திமுகவிற்கு மட்டும் பெருமை அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே பெருமை'' என தெரிவித்தார்.