உதவி செய்ய நினைத்து ஏமாந்த ஜி.வி.பிரகாஷ்... பறிபோன ரூ.20 ஆயிரம்

உதவி செய்ய நினைத்து ஏமாந்த ஜி.வி.பிரகாஷ்... பறிபோன ரூ.20 ஆயிரம்

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பு, இசை என இரு பிரிவிலும் வெற்றிவாகை சூடி வரும் ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்த பண உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு எக்ஸ் தள கணக்கில் இருந்து ஜி.வி.பிரகாஷுக்கு உதவி கேட்டு வீடியோ பதிவு ஒன்று வந்துள்ளது. அந்த உருக்கமான பதிவு ஜி.வி. பிரகாஷை மனம் நெகிழ வைத்திருக்கிறது. அதில் "எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து மனம் உருகிப் போன ஜி.வி. பிரகாஷ் அந்த பதிவை அனுப்பியவரின் செல்போன் நம்பரை வாங்கி, அவரது வங்கிக் கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் தான் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன் பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் தான் இதில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியிருக்கிறது. தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக வலைதளத்தில் உலவி வந்திருக்கிறது. அந்த வீடியோ ஏற்கெனவே யூடியூப்பில் உலவி வருவதாகவும், அதை ஜி.வி.பிரகாஷுக்கு பார்வேர்டு செய்து யாரோ நன்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்றும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உதவும் குணம் படைத்த பலரும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால், உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.