தலைமைத்துவத்தில் ‘பழைய தலைமுறையினர் விலகி புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும் என்று தலைமை மாற்றத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல், தொழில் மற்றும் அமைப்புகளில் இளைஞர்களை முன்னிறுத்துவது குறித்து நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விதர்பா-காஸ்தார் தொழில்துறை விழா தொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேச்சிய கட்கரி, ஒரு அமைப்பு சீராகச் செயல்படும்போது, மூத்த தலைமுறையினர் பின்வாங்கி, அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளம் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு துறையிலும் படிப்படியான தலைமுறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினார். புதிய தலைமுறை பொறுப்பேற்று, அமைப்பு சீராகச் செயல்படத் தொடங்கும் போது, மூத்தவர்கள் மரியாதையுடன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். கட்கரியின் கூற்றுப்படி, இந்த மாற்றம் எந்தவித அழுத்தத்தின் கீழும் நடக்காமல், ஒரு இயல்பான செயல்முறையாக நிகழ வேண்டும் என்பதையே குறிக்கிறது.
“இப்போது நாம் ஓய்வு பெற வேண்டும்,”என்று கூறிய கட்கரி, “ஆஷிஷின் தந்தை என் நண்பர். இப்போது நாம் படிப்படியாக ஓய்வுபெற்று, பொறுப்பை புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த அமைப்பு சீராக இயங்கத் தொடங்கியதும், நாமும் ஓய்வுபெற்று மற்ற வேலைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றார். அவரது இந்த அறிக்கை, அனுபவத்தையும் இளைஞர்கள் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
‘அட்வான்டேஜ் விதர்பா’ முன்னெடுப்பில் இளம் தலைமுறையினரைத் தீவிரமாக ஈடுபடுத்தியதற்காக, ஏஐடி (தொழில்துறை மேம்பாட்டுக்கான சங்கம்) அமைப்பின் தலைவர் ஆஷிஷ் காலேயை கட்கரி பாராட்டினார். இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று குறிப்பிட்ட கட்கரி, இளைஞர்களின் பங்கேற்பு எந்தவொரு முன்னெடுப்பிற்கும் புதிய ஆற்றலையும் திசையையும் அளிக்கிறது என்றார்.
ஏஐடி அமைப்பின் தலைமை வழிகாட்டியான நிதின் கட்கரி, பிப்ரவரி 6 முதல் 8 வரை நாக்பூரில் நடைபெறும் அட்வான்டேஜ் விதர்பா கண்காட்சி தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்று தெரிவித்தார். இந்த மூன்று நாள் நிகழ்வு, விதர்பா பிராந்தியத்தின் தொழில்துறை ஆற்றலை நாட்டிற்கு வெளிப்படுத்த ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.