பவுன்ஸ் பிட்ச்கள் தேவை: மே.இ.தீவுகள் தொடர் முடிந்தவுடன் கம்பீர் கோரிக்கை

பவுன்ஸ் பிட்ச்கள் தேவை: மே.இ.தீவுகள் தொடர் முடிந்தவுடன் கம்பீர் கோரிக்கை

உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் பிட்ச்களில் பவுன்ஸும் பந்துகள் நல்ல வேகத்துடன் செல்ல வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக அகமதாபாத் பிட்ச் ஓரளவுக்கு பரவாயில்லை, ஆனால் டெல்லி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத பிட்ச் என்பதை டெல்லியை சேர்ந்த கம்பீரே ஒப்புக் கொண்டதற்கு சமமானதே இந்த கோரிக்கை. இந்திய அணி டெல்லி டெஸ்ட்டில் 200 ஓவர்கள் களத்தில் நிற்க வேண்டியிருந்ததால் கம்பீர் இந்த ஸ்டேட்மெண்ட்டை விடுகிறாரே தவிர வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கொஞ்சம் சாதகம் இருந்து அந்தச் சவாலை இந்திய அணி சந்திக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்துவது போல் தெரியவில்லை.

நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 என்று வாங்கிய போது பெங்களூரு கிரீன் டாப் பிட்சில் 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது, உடனே குழிப்பிட்சிற்குத் திரும்பினார்கள் ஆனால் அதிலும் மீளவில்லை உதை வாங்கியது. இப்போது மீண்டும் பவுன்ஸ் பிட்ச் கோரிக்கை எழுப்புகிறார் கம்பீர்.

இதை இப்போது ஏன் சொல்கிறார்? அதாவது பிட்ச் இப்படி இருக்க வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானித்து அதன்படி போடுமாறு நாங்கள் கேட்கவில்லை என்பதை இப்படிச் சொல்கிறாரா அல்லது இவர்கள் சொல்லி டெல்லி பிட்சை இப்படிப் போட்டார்களா என்பதும் தெரியவில்லை.

 பிட்ச் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 5ம் நாள் வரை ஆட்டம் சென்றது ஓகே. ஆனால் எட்ஜ் எடுத்தால் பந்துகள் கைக்குச் செல்ல வேண்டும் முன்னமே தரை தட்டக் கூடாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஏதாவது இருக்க வேண்டும். ஸ்பின்னர்கள் முக்கியமான பங்காற்றுவது பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் அணியில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தரமான நிலையில் இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கும் ஆட்டத்தில் பங்கிருக்க வேண்டும்.

பந்துகள் போதுமான அளவுக்குத் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் பந்துகள் கேரி ஆக வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்பது நம் பொறுப்பு அதற்காகவாவது நாம் பிட்சை இன்னும் கொஞ்சம் உயிரோட்டத்துடன் போட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற நல்ல உயிரோட்டமுள்ள பிட்ச்கள் தேவை.

வெஸ்ட் இண்டிஸ் அணி 2வது இன்னிங்சில் எதிர்த்து நின்று சவாலைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட் செழிக்க வலுவான மே.இ.தீவுகள் அணி தேவை.

இவ்வாறு நல்ல விதமாகப் பேசுவது போல் தெரிந்தாலும் எதிரணியினருக்கும் கொஞ்சம் பிட்சில் சாதக அம்சங்களை அமைத்துக் கொடுப்பது ஆஸ்திரேலியா மட்டுமே. வங்கதேசம் சென்றால் அவர்கள் ஸ்பின்னுக்குத் தக்கவாறு பிட்ச் போடுவார்கள், ஏனெனில் அந்தச் சவாலை ஆஸ்திரேலியா தங்கள் சொந்த மண்ணிலேயே எதிர்கொள்ள வேண்டும், ஆஸ்திரேலிய ரசிகர்கள் சவாலான போட்டிகளையே விரும்புவார்கள், சவாலை சமாளித்து ஆட்கொண்டு வெற்றி பெறுவதுதான் ஆஸ்திரேலியா ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். எனவே அதற்கேற்ப பிட்ச்களை அமைப்பார்கள்.

ஆனால், இங்கு எந்த சொத்தை அணி வந்தாலும் சரி சவாலெல்லாம் தேவையில்லை, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். இந்திய ரசிகர்கள் அப்படித்தான் ஆட்டத்தை ரசிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை. இந்திய ரசிகர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரு விதம். இந்தப் பன்மைத்துவமே இந்திய ரசிகர்களை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கிறது.

உலக கிரிக்கெட் அரங்கில் அணிகள் எழும் வீழும் இதற்குப் பல காரணங்கள் உண்டு, ஆனால் அந்த வீழும் அணியை மேம்படுத்துமாறு அவர்களின் பலத்திற்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்து பிட்ச் அமைக்க வேண்டும், அப்போதுதான் பலவீனமானவர்கள் பலமாவார்கள். ஸ்டாயிக் தத்துவப் பள்ளியைச் சேர்ந்த செனெகா என்ற தத்துவ ஞானி ‘உடலை உழைப்பு எப்படி வலுவாக்குகிறதோ அதே போல் கஷ்டங்கள் மனத்தை வலுப்படுத்தும்’ என்றார். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அந்த மனவெழுச்சி இருந்தால் வலுப்பெறும் ஆனால் நாம் என்ன செய்ய வேண்டுமெனில் பலவீனமானவர்கள் என்றாலும் அவர்களுக்கும் சாதகமாகவும் சிலவற்றைச் செய்து கடினப்பாடுகளை நாம் எதிர்கொள்ளும் போதுதான் இந்திய அணி மேலும் மேலும் வலுப்பெறும்.