மகளை கழுத்தறுத்து கொன்ற EX போலீஸ்காரர்! விழுப்புரம் அருகே பரபரப்பு
நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த மகளை, ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை செய்து விட்டு தானும் விபரீத முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் (69). இவரது மனைவி செல்வி. இவர் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு (33) வயதில் ஸ்வேதா என்கிற மகள் இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குரும்பன்கோட்டை பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்வேதாவிற்கு தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்ததால் கணவர் சில மாதங்களுக்கு முன்பு ஸ்வேதாவை அவரது தந்தை வீட்டில் விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்வேதாவும் அவரது மகளும் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தனது மகளை புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்து வந்துள்ளார் கோதண்டராமன். எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் அவரது உடல் நிலை குணமடையவில்லை. மேலும் உடல் உபாதைகளால் ஏற்பட்ட வலியால் மகள் தொடர்ச்சியாக அவதிப்படுவதையும் பார்த்து தாங்க முடியாத கோதண்டராமன் இன்று காலை 6 மணி அளவில் மகளை கொலை செய்தார். பின்னர், தானும் விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிய மனைவி கழுத்தறுத்து கிடந்த மகள் மற்றும் கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் சிவசந்திரன் மற்றும் விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் ஆகியோர் கோதண்டராமன் மகளின் உடலை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும், விபரீத முயற்சியில் ஈடுபட்ட கோதண்டராமனையும் கைது செய்து, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து, இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.