திருச்சியில் 3 நாட்களாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை - விமான நிலைய இயக்குநர் தகவல்
கடந்த மூன்று நாட்களாக திருச்சியில் எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை எனவும், முன்பு ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த 2,500 பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய பணம் முழுமையாக திருப்பி தரப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய இயக்குநர் ராஜீ தெரிவித்துள்ளார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் ஏராளமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து 9-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இண்டிகோ விமான சேவை தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜீ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இண்டிகோ விமான நிறுவன பிரச்சினையால் திருச்சி விமான நிலையத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கடந்த மூன்று நாட்களாக எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை. விமான சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
அதேபோல், 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 40 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதில், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த 2,500 பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய பணம் முழுமையாக திருப்பி தரப்பட்டது. விமானம் ரத்து மற்றும் காலதாமதத்தால் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே பயணிகள் சற்று சிரமமடைந்தனர். அதன் பின்னர் பயணிகளுக்கு விமானம் இயக்கம் தொடர்பான அனைத்து தகவல்களும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. மேலும், காத்திருந்த பயணிகள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது.
திருச்சி விமான நிலைய புதிய முனையம் அருகே கட்டப்பட்டு வரும் கட்டுப்பாட்டு கோபுரத்தின் உயரம் குறைவாக இருப்பதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, 47 மீட்டருக்கு கட்டுப்பாட்டு கோபுரம் கட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆறு மீட்டர் உயர்த்தப்பட்டு கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்க பணிகளும் விரைவில் தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.