ஹிமாச்சலில் பயங்கரம்: நிலச்சரிவில் சிக்கி பேருந்து மண்ணில் புதைந்ததில் 15 பயணிகள் உயிரிழப்பு

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கியதில் அதில் பயணித்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மரோட்டானில் இருந்து குமர்வின்னை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று மாலை பயணித்துக் கொண்டிருந்தது. ஜன்டுட்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைப்பாதையான பாலுகாட் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பேருந்து சிக்கியதில் அதில் பயணித்த 30 பேரில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்தனர் என்று பிலாஸ்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், நிலச்சரிவில் சிக்கிய பேருந்து மற்றும் பயணிகளை மீட்கும் பணியை முழுவீச்சில் மேற்கொண்டனர்.
நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் திங்கள்கிழமை முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின்போது அவ்வழியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது தந்தை ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.