கரூர் கூட்டத்தை விஜய் சரியாக கையாண்டிருக்க வேண்டும் - வைகோ பேச்சு

கரூர் கூட்டத்தை விஜய் சரியாக கையாண்டிருக்க வேண்டும் - வைகோ பேச்சு

கரூர் கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்து விடும் என்று யூகித்து, தவெக தலைவர் விஜய் அதை சரியான முறையில் கையாண்டிருக்கலாம் என மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் பரபரப்புரை இப்போதே ஆரம்பித்து விட்டது. மாலை நேரங்களில் அரசியல் விவாதங்கள், நாள்தோறும் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றன.

கலை உலகில் மின்னும் நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார். கரூரில் 7 மணி நேரம் மக்கள் காத்திருக்கிறார்கள் என்ற தகவலை அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்து விடும் என்று முன்னரே யூகித்து, அதை சரியான முறையில் விஜய் கையாண்டிருக்கலாம்.

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பதற்றத்தில் சென்னை சென்று விட்டார். திருச்சியில் விடுதி எடுத்து தங்கியிருந்து, ஒரு நாள் கழித்து கூட, உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை நேரடியாக சென்று விஜய் சந்தித்திருக்கலாம். அப்படியே அவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்திருக்கலாம்.

கடந்த 1994-இல், சென்னையில் நாங்கள் நடத்திய பேரணி கூட்டத்தில் உயிர் சேதம் நடந்துவிடக்கூடாது என்ற பயம் எங்களுக்கு இருந்தது. அதனால், அதனை கட்டுக்கோப்பாக நடத்தினோம்.‌ லட்சக்கணக்கான தொண்டர்களை பாதுகாக்க 3,000 தொண்டர் படைகளை உருவாக்கினோம்.

ஆனால், கரூரில் சுமார் 7 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் மயங்கி விழுந்துள்ளனர். ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இதை தடுத்திருக்கலாம். அதிக கூட்டம் கூடும் இடங்களில், குழந்தைகளை கொண்டு போகாமல் தாய்மார்களும் தவிர்த்திருக்கலாம்.

கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. கருரில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், இதுபோன்று இனிமேல் நடக்கும் கூட்டத்திற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்" என வைகோ கூறினார்.

திமுகவுக்கே வெற்றி

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய வைகோ, "யார் என்ன சொன்னாலும் திமுக தலைமையிலான கூட்டணி தான், வரப்போகிற 26 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. தற்போதைய யூகங்கள், கணக்கெடுப்புகள் போன்று தேர்தல் சமயத்தில் இருக்காது. 2026 தேர்தலில் எந்த ஒரு பாதிப்பும் திமுகவுக்கு ஏற்படாது. புதிதாக வந்தவர், பெருமளவு வெற்றி பெற்று விடுவார் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று தெரிவித்தார்.

தென் மாவட்டத்தில் வளக்கொள்ளையா?

பீகார் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேஜஸ்வி யாதவ் இண்டி கூட்டணியின் சார்பாக பீகார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியில் இருந்து ஒருவர் விலகி உள்ளார். அதனால் பீகார் தேர்தலில் முடிவை யூகித்து சொல்ல முடியவில்லை,” என்று பதிலளித்தார்.

மேலும், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அன்புமணி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, "எதன் அடிப்படையில் அன்புமணி இவ்வாறு தெரிவித்தார் என்று தெரியவில்லை. தினம் ஒரு அறிக்கை விடுகிறார். அவரது அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.