குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ‘வீரதீர குழந்தைகள் தினவிழா’ கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “குழந்தைகளுக்கு வீர தீர கதைகள், நாட்டுப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றைக் கூறி வளர்க்க வேண்டும். அப்போது தான், குழந்தைகள் ஒரு செயலை பயமின்றி துணிச்சலோடும் செய்வார்கள்.
கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பள்ளிகளில் காலை, மதியம் மற்றும் மாலையில் உணவும், சிற்றுண்டியும் வழங்கி வருகிறோம். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு படிக்கும் வகையில், தேவையான அளவுக்கு கல்லூரிகளை உருவாக்கியுள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அவருக்கு வலுசேர்க்கும் விதமாக, நாமும் இணைந்து செயல்பட வேண்டும்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். அதே போல், முதியோர் உதவித்தொகை தற்போதுள்ள தொகையுடன் கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் தரமான கேழ்வரகு மாவு வழங்கப்படுவதை உறுதி செய்ய, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறைக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
ஏற்கனவே, புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது. கேழ்வரகு கால்சியம், நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து உணவாகும். குறிப்பாக, இது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிக அவசியம் என்பதால், புதுச்சேரி அரசு இதனை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் டிச.9 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது, புதுவையில் ரேஷன் கடைகளே இல்லை என விஜய் குற்றம் சாட்டினார். அதற்கு புதுச்சேரியில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி புத்தாண்டு பரிசாக பல திட்டங்களை வெளியிட்டும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிகழ்வு, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் NRC - TVK கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்காது என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.