பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000; இபிஎஸ் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000; இபிஎஸ் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 27 அன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளும், நலத்திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கல்வியாளர் அணி மாநில செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் பங்கேற்று பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினர்.

இந்த நிகழ்வுக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ''பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 7,898 வகுப்பறைகள் கட்டி வருகிறோம். பாழடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பள்ளிக்கூடங்களில் புதிய கட்டடம் கட்டப்படுவதால், சமுதாய கூடத்திலோ அல்லது வாடகை கட்டடங்களிலோ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார். அரசு பள்ளிகளில் டெண்டர் விடுவது நடைமுறையில் உள்ளது. விரைவில் டெண்டர் விடப்படும், தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்'' என்றார்.

ஜாக்டோ ஜியோ ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து பேசிய அவர், ''நேற்று இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள். ஜனவரி 6ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார். மத்திய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இருந்த போதும் அவர்களுக்காக நல்ல செய்தி நிச்சயம் வரும்'' என தெரிவித்தார்.

தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை குறித்து, ''திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். மூத்தவர்களின் ஆலோசனைகளும் எங்களுக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பேசி உள்ளார். இளைஞரணி செயலாளரான அவருக்கு இந்த உரிமை உள்ளது'' என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ளார். அந்த கூட்டணி பலப்பட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்குமா? என்கிற கேள்விக்கு, ''எங்களுக்கு போட்டியே திராவிட மாடல் 2.0-வில் நாங்கள் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தான். தற்போது மேற்கொள்ளும் திட்டங்களை காட்டிலும் அதில் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் போட்டியே'' என்றார்.

அடுத்து பேசிய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், '' ஒரு நடனத்திற்காக நான் ஆண்டாள் வேடம் போட்டேன். என்னை அறிந்தவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு பதில் எதுவும் கூற முடியாது'' என்றார்.