
இந்தியாவிலேயே அதிக அளவில் செல்போன் தயாரிக்கும் மாநிலம் தமிழ்நாடு. - அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சு
இந்தியாவிலேயே அதிக அளவில் செல்போன் தயாரிக்கும் மாநிலம் தமிழ்நாடு. அதாவது 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்போன்கள் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. அந்த செல்போன்களை சரியாக பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என மாணவிகள் மத்தியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சு.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, தமிழ் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட நாடகம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மேலும் பிரமீடு வகையிலான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கண் கவரும் வண்ணம் இருந்தது.
தொடர்ந்து மாணவிகள் மத்தியில் பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறும்போது...
சொந்த காலில் நிற்கும் மகத்தான வீராங்கனைகளாக நீங்கள் மாற வேண்டும். தனித்துவமிக்கவர்களாக மாற வேண்டும். இல்லத்து அரசிகளாக மாற வேண்டும். இவ்வாறு நீங்கள் மாறுவதற்கு படிப்பது மட்டுமே ஒரே வழி. வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கப் போவது நீங்கள் படிக்கும் படிப்பு தான். அதைதான் தமிழக முதல்வர் சொல்கிறார், நீங்கள் படியுங்கள் மற்ற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்
இந்த பள்ளியில் படித்து வேலை கிடைக்காத ஐந்து, ஆறு மாணவிகளை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்கான முழு முயற்சியும் நான் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். மாணவிகள் செல்போனை அடுத்த கட்டமாக என்ன படிப்பது என்று நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். இந்தியாவிலேயே அதிக அளவில் செல்போன் தயாரிக்கும் மாநிலம் தமிழ்நாடு. அதாவது 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்போன்கள் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. அந்த செல்போன்களை சரியாக பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.