
நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி மருத்துவமனை திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக
சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார்.
மேலும் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்இதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் களஆய்வு பயணமாக அவர் இன்று (சனிக்கிழமை) செல்கிறார். முன்னதாக நீலகிரி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். அதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நடந்து முடிந்த பணிகளை திறந்து வைக்க உள்ளார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்
இதற்காக பிரமாண்ட மேடை அமைத்து அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழாவையொட்டி நீலகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வண்ண விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் 2 இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேலும் முதல்-அமைச்சர் வருகையை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.