தைரியமானவனாக நடி, துணிச்சல் வந்துவிடும் : புலி, நாய், குரங்கு கதை..!

தைரியமானவனாக நடி, துணிச்சல் வந்துவிடும் : புலி, நாய், குரங்கு கதை..!
By: No Source Posted On: May 26, 2020 View: 3036

தைரியமானவனாக நடி, துணிச்சல் வந்துவிடும் : புலி, நாய், குரங்கு கதை..!

 

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர்.


அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது.


அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது, தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய். புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.


புலி அருகில் வந்தவுடன் சத்தமாக இப்படி பேசியது :


"ஆஹா... புலியின் மாமிசம் என்ன சுவை... என்ன சுவை..! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்று, நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே சத்தமாக பேசியது.. அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.


இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.


அதனைப்பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப்புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித்தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.


குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும், கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.


குரங்கும், புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்தபடியே அவற்றைப் பார்க்காததுபோல பாசாங்கு செய்து கொண்டு, இன்னும் சத்தமாக இப்படி பேசியது :


"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


உண்மையிலே நடுங்கிப்போன புலி, பக்கத்தில் இருந்த குரங்கை பாய்ந்து கடித்து தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது.


இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது,


"எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு துன்பம் நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதால் எந்த முன்னேற்றமும் நிகழப் போவதில்லை. அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். தைரியம் குறைவாக இருந்தாலும் மிகவும் தைரியமானவனாக நடிக்க வேண்டும். அந்த செயலே எதிர்பாராத துணிச்சலையும் வெற்றியையும் தேடித்தரும்."


"Act as If you already have It with you!"

Tags:
#Dog  # tiger and monkey story  # self confidence  # act as if you already have it  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos