தமிழ்நாட்டின் பெண் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட பாடல்...! ஒவ்வொன்றும் வைரம் தீட்டிய வரிகள்..!
பாரதி தாசனார் பிறந்த நாள் இன்று.
திராவிட இயக்கக் கொள்கைகளை
கூர் தீட்டிய வாளாக
பாடல்களில் தீட்டியவர் அவர்.
பாரதி தாசனை ஏன் 'புரட்சிக் கவிஞர்' ஆக்கினார்கள்
என்பதற்கு, இந்தப் பாடல் ஒரு சான்று.
--------------
பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக்கூடாது
என்று எல்லோரும் பேசிவந்த காலகட்டம் அது.
அந்தக் காலத்தில்
பள்ளிக்கூடம் சென்று படிப்பதன் அவசியத்தை
ஒரு ஏழைத் தந்தை
தன் பெண் குழந்தைக்கு
எடுத்துச் சொல்வது போல் அமைந்த
இந்தப் பாடல்
தமிழ்நாட்டின் பெண் கல்விப் புரட்சிக்கு
வித்திட்ட பாடல்களில் ஒன்று.
பெரியாரின் 'பெண் ஏன் அடிமை ஆனாள்?'
புத்தக வரிசையில் வைத்துப் போற்றத்தக்க
புத்தாக்கப் பாடல் இது.
அதிலும் அந்த வரிகள்
"மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!"...
எத்தனை அக்கறையுடன் கவிஞர் எழுதி இருப்பார்..!
பாவேந்தர் இயற்றிய இந்தப் பாடலை
ஒரு தந்தையின் கனிவுடன்
தமது வெண்கலக் குரலில் பாடி மகிழ்வித்தார்
ஐயா சீர்காழி கோவிந்தராசனார்.
----------
நீங்களும் கேளுங்கள்.. பகிருங்கள்..!
----------
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு!
கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு - பெண்
கல்வி, பெண்கல்வி என்கின்றது அன்போடு!