ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் 76 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட துப்பாக்குடி மற்றும் அணைந்தபெருமாள் நாடநூர் ஆகிய கிராமங்களுக்கு கிராம சமுதாய நலக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் பேசியதாவது,, "நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைக்கோடி மக்களின் தேவைகளையும் கண்டறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தென்காசி மாவட்டத்தில் முகாம் நடத்தப்பட்டு பெறப்படும் மனுக்களுக்கு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், சமூக நலத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இத்திட்டம் செப்டம்பர் 5 அண்ணா பிறந்த நாள் அன்று துவக்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு பேருதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்" என பேசினார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகைக்கான ஆணையினையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரைஸ் மில்லுக்கான கடன் உதவி தொகையாக ரூ.1.77 கோடிக்கான காசோலையினையும், தமிழ்நாடு ஊர்க் வாழ்வாதார இயக்கம் மூலம் 10 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு கடன் ரூ.5.00 லட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை 16 பயனாளிகளுக்கு ரூ.2,12,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.37,608 மதிப்பிலான இடுப்பொருட்களும், வேளாண்மைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பீட்டில் தென்னங்கன்றுகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் ரூ.52,416 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளையும் வழங்கினார்.
Tags:
#Tenkasi
# Collector
# Ravichandran
#