ஜூன் மாதத்தில் கனமழை - அரிய நிகழ்வு!
சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
பொதுவாக, தமிழகத்துக்கு தொடர் கனமழை என்பது வட கிழக்கு பருவமழையினால் தான் கிடைக்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் தமிழ்நாட்டில் தொடர் கனமழை பெய்யும். ஆனால் நேற்று முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, கோவா, என பிற மாநிலங்களுக்குதான் தொடர் கனமழையை கொடுக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்களில் மழை கிடைக்கும். தென் மாவட்ட அணைகள் நிரம்பும்.
சில நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக இந்த காலகட்டத்தில் மழை பெய்யும். அப்படி பெய்தாலும் சிறிது நேரம் பெய்து ஓய்ந்துவிடும். ஆனால் நேற்று இரவு முதல் தொடச்சியாக மழை பெய்து வருவது ஏன் என்று வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
தெற்கு வங்க கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது. அங்கிருந்து வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கியது. இதனால் மேகக்கூட்டங்கள் நகர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் மழையை கொடுத்துள்ளது.
நேற்று முன் தினம் வரை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் பதிவானது. இன்று அதே மீனம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணி, நந்தனம் பகுதிகளில் 12 செண்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
1991, 1996 போன்ற காலகட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வந்து கனமழையை கொடுத்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 27 அண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
Tags:
#rain
# chennairain
#