திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 67 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தையொட்டி 1000த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.
Tags:
#திருவண்ணாமலை
# தீபத்திருவிழா
# Thiruvannamalai
# Deepa Thiruvizha