சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனம்
சென்னையில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.798 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 78 பெட்டிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்தார். சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் 4வது நீண்ட மெட்ரோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது.
நீலம் மற்றும் பச்சை நிற வழித்தடங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இயக்கப்படுகிறது. 5 பாதைகளில் இயக்க சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்நல்லூர் வரை 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 78 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க ரூ.798 கோடி ஆர்டர் பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அல்ஸ்டாம் நிறுவனம் சுமார் 78 அதிநவீன மெட்ரோ ரயில் பெட்டிகளை சொந்தமாக டிசைன், உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்ப பெட்டிகள் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. ரயில்களின் சிக்னல்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படும்.
80 கி.மீ. வேகத்தில் இயக்கக்கூடிய இந்த புதிய ரயில் பெட்டிகள் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையேயான 26 கி.மீ. மெட்ரோ பாதையில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
Tags:
#மெட்ரோ ரயில்
# Metro train
#